ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏலூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி பகுதியில் அமைந்துள்ளது ஏலூரு மாவட்டம். இந்த மாவட்டத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நுரை தள்ளி, மயக்கமடைகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி இன்னமும் கண்டுபிடிக்கப்பட வில்லை. மர்ம நோயால் ஆந்திர மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந் நிலையில் ஏலூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களை சந்தித்து நோயின் விபரங்களையும் அவர் கேட்டறிந்தார். எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் ஏலூரு மருத்துவமனை வந்து விவரங்களை சேகரித்துள்ளது.