விஜயவாடா

ந்திரப் பிரதேச மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்களைத் தலைநகராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் நகர் தலைநகராக ஒதுக்கப்பட்டது.  விரைவில் ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகர் அமைக்க வேண்டும் எனவும் தற்காலிக தலைநகராக ஐதராபாத் விளங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதையொட்டி அப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் ஆந்திர தலைநகராக  அமராவதி நகரை அறிவித்தார்.   அமராவதி நகர் விரிவாக்கத்துக்காக பல நிலங்கள் அப்போது கையகப்படுத்தப்பட்டது.   சென்ற வருடம் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் தோல்வி அடைந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகி ஆட்சியை அமைத்தார்.  அவர் அமராவதிக்குப் பதில் மற்றொரு தலைநகரைத் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்தார்.  இதற்கு மாநிலம் எங்கும் குறிப்பாக அமராவதி நகர் விரிவாக்கத்துக்கு நிலம் அளித்தவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையொட்டி அமராவதி நகர் அரசியல் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் கர்னூல் நீதித் துறை தலைநகராகவும் அறிவிக்கப்பட்டது.  நேற்று கூடிய ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமராவதி நகர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது.   அத்துடன் நகர மேம்பாட்டுக்காக நிலம் அளித்த விவசாயிகளுக்கு 15 வருடங்களுக்கு தொடர்ந்து இழப்பீடு வழங்கவும் அமைச்சரவை உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.