லண்டன்:

இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் ஆன்ட்ரி ரூசெல் விலகினார். அவருக்கு பதில் சுனில் அம்ப்ரீஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.


ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஆன்ட்ரி ரூசெல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 21 ரன்கள் தான் ஆன்ட்ரி ரூசெலின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

மேற்கு இந்திய தீவுகள் அணி இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டி ஆரம்பித்தது முதல் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆன்ட்ரி ரூசெல் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் ஆட்டத்திலிருந்து விலகினார்.
அவருக்குப் பதிலாக மேற்கு இந்திய தீவுகள் அணியில் சுனில் அம்ப்ரீஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

26 வயதான சுனில் அம்ப்ரீஸ் 6 டெஸ்ட் போட்டிகளிலும், 6 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வரும் வியாழக்கிழமை இந்தியாவுடன் மேற்கு இந்திய தீவுகள் அணி மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான், மேற்கு இந்திய தீவுகள் அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.