நெருங்கி பழகிய ஒருவருடன் தான் கொண்டிருந்த உறவு ஒன்று தனது வாழ்க்கையில் அதீத மன அழுத்தத்தை கொடுத்ததாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா  தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான வட சென்னை திரைப்படத்தில் நடித்து, அதற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றவர் ஆண்ட்ரியா. இவர் பாடகியும் ஆவார். கடந்த சில நாட்களாக திரைத்துறையில் பெரிதும் காணப்படாமல் இருந்த ஆண்ட்ரியா, சமீபத்தில் ஒரு நிகழ்வில் தான் அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய இயல்பான பணிகளுக்கு திரும்புவதற்குள் அதில் இருந்து மீண்டு விட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை வெளிப்படாமல் இருந்த நிலையில், பெங்களூருவில் தன்னுடைய கவிதைகள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆண்ட்ரியா, அதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

ஆண்ட்ரியாவின் கவிதைகளை படித்த சிலர், அதில் உள்ள வரிகள் மன அழுத்தம் கொண்டவர் எழுதியது போல இருக்கிறதே ? என்று கேள்வி எழுப்ப, அதற்கு தான் நெருக்கமாக பழகி வந்த நபர், தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதீதமாக காயப்படுத்திவிட்டதாகவும், கடுமையான மன அழுத்தத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர, ஆயுர்வேதம் தொடர்பான நிகழ்வில் கலந்துக்கொண்டதோடு, தனது திரைத்துறை பணிகளுக்கும் ஓய்வு கொடுத்திருந்தார். அத்தோடு தனது கவிதையான “ப்ரோக்கன் விங்கின்’ அட்டைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ள ஆண்ட்ரியா, தனது கவிதைகள் மூலம் தனிப்பட்ட ஒன்றைப் பகிர்ந்து கொள்ள நிறைய தைரியம் தேவைப்பட்டது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில், இன்று சென்னையில் நடைபெற்று வரும் ஏ.ஆர் ரகுமான் நிகழ்வு ஒன்றில் ஆண்ட்ரியா பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.