கொந்தகை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடத்தப்பட்டு வரும் 6வது அகழ்வாய்வில் விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டுஉள்ளது. ஏற்கனவே சில மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது விலங்குகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் போன்ற  இடங்களில் பிப்.19-ம் தேதி தொடங்கி தமிழகத் தொல்லியல்துறை மூலம் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வின்போது,  ஏற்கனவே சுடுமண்ணாலான பானைகளின் ஓடுகள், பானைகள், செங்கற் களால் ஆன கட்டுமான சுவர்கள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், இருவண்ண பானைகள், இணைப்பு பானைகள், உலைகலன், தரைதளம், செங்கல் கட்டுமானம், வட்டவடிவ துளைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. மணலூரில் உலைகலன் கண்டறியப்பட்டது.

அகரத்தில் தங்க நாணயம், நத்தை ஓடுகள், பல்வேறு வித வடிவ பானைகள், பானை ஓடுகள், 5 அடுக்குகள் கொண்ட உறைகிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஏற்கெனவே கண்டறியப் பட்டன. சுமார்  5 அடி உயர மனித (பெரியவர்) எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்ந்து, பழங்காலத்து எடைக்கற்கள் மற்றும் விலங்கின் எலும்பு ஒன்று கிடைத்த நிலையில், தற்போது மேலும் ஒரு விலங்கின் எலும்பு கண்டறியப்பட்டுள்ளது.

முழுமையான ஆய்வுக்குப் பிறகே எந்த வகையான விலங்கு, எத்தனை ஆண்டுகள் பழமையான எலும்பு என்பது தெரியவரும் என, தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடயே, கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளில் ஈடுபடக் கூடிய பணியாளர்கள் தங்கும் இடத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அருங்காட்சியகம் கட்டும் பணி துவங்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.