சென்னை:

நீட் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நீட்டுக்கு எதிராக  தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை  நடைபெறுகிறது.

இதில், கலந்துகொள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டாலின் கூறும்போது,  நீட் காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என  சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இந்த பிரச்னையை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.