சென்னை:

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50வது  நினைவுநாளை யொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஸ்டாலின் உள்பட திமுக முன்னணியினர் நடந்து வந்தனர். பேரணி மெரினா கடற்கரை வந்ததும், அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார். அதில்,  பேரறிஞர் அண்ணா அவர்களின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக தலைவர் அவர்கள் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முதல் அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் கழக தலைவர் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்று பதிவிடப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து கலைஞர் சமாதியிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவர்கள், மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அண்ணா அவர்களின் 50-வது நினைவு தினம் அன்று அவரை நினைவுகூறும் வகை யில் “அண்ணாவையும், அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும்” என கழக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு கடந்தாலும்  என்றென்றும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையிலா எழுத்தாலும், ஈர்த்திடும் பேச்சாலும் அயராத உழைப்பாலும் , ஆளுமையாலும் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வை  ஊட்டியவர் அண்ணா என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் அண்ணா என்றும் அண்ணாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.