டில்லி:

பிரதமர், மத்திய அமைச்சர், உள்பட உயர் பதவியில் உள்ளவர்களை விசாரிக்கும் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி பிரபல சமூக ஆர்வலர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்த நிலையில், தற்போது, லோக்பால்  அமைப்பிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனங்க ளுக்கான விளம்பரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு, தலைமை நீதிபதி அல்லது உச்சநீதி மன்ற நீதிபதி அல்லது அதற்கு இணையான பதவியில் இருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்ங

மேலும் சட்டம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வரும் 22ம் தேதி கடைசி தேதி என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோக்பால் அமைப்பிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் மசோதா 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், லோக்பால் அமைப்பை உருவாக்க மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. லோக்பால் தலைவர், உறுப்பினர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை கடந்த ஆண்டு அறிவித்தது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை இதற்காக மத்திய அரசு கடந்தஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. ஆனால், அதன்பின்  லோக்பால் குறித்து எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்காததால், அன்னா ஹாசரே மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதையடுத்து, தற்போது மத்திய அரசு லோக்பால் மசோதா குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.