சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந் நிலையில், தொலைதூர கல்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

1 மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடியாக எழுத்து தேர்வு நடத்தப்படும்.

லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் மாணவர்கள் தேர்வுகளை எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.