சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 7 மாதங்களாக கல்விநிறுவனங்கள்  மூடப்பட்டுள்ளன. விரைவில்  கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இருந்தாலும் ஆன்லைன் மூலம்  அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.  விண்ணப்பங்கள், தரவரிசைப்பட்டிய, சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வருகிறது. பல கல்வி நிறுவனங்கள் ஏற்கெனவே ஆன்லைன் வாயிலாக அடுத்தடுத்த பணிகளை தொடங்கிவிட்டன.

அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.  அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27 ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விபரங்கள் இரு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) வெளியிடப்படும்.

விண்ணப்பித்த மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.