சென்னை:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கு அங்கீகாரம் வழங்கியதை ரத்து செய்து தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான சட்ட திருத்தத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று கொண்டு வந்தார்.

அந்த மசோதாவில்…-

2012ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசானது 2012ம் ஆண்டு நிறைவேற்றிய இச்சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. அதாவது தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என தீர்மானித்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.