அம்மான்: ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான ஆசிய அளவிலான தகுதி குத்துச்சண்டைப் போட்டிகளில், இந்தியாவின் அமித் பங்கல்(52 கிகி) மற்றும் மேரிகோம்(51 கிகி) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் தகுதி பெற்றுள்ளனர்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆண்களுக்கான 52கிகி எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் அமித் பங்கல், பிலிப்பைன்ஸ் நாட்டின் கார்லோ பாலமை 4-1 என்ற கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்து, ஒலிம்பிக்கிலும் நுழைந்தார்.

பெண்களுக்கான 51கிகி எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் மேரிகோம், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஐரிஷ் மேக்னோவை 5-0 என்ற கணக்கில் சிறப்பான முறையில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி, ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றார்.

ஒலிம்பிக் தகுதிபெறுவது மேரிகோமிற்கு இரு இரண்டாவது முறை. இவர் ஏற்கனவே கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது நினைவில் நிற்கலாம்.