லக்னோ: பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறையிலடைக்கப்பட்ட உத்திரப்பிரதேச பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார் அவரது கட்சியின் சக சட்டமன்ற உறுப்பினரான ஆஷிஷ் சிங் அஷு.

குல்தீப் செங்காரின் சொந்த ஊரான உன்னாவ் அருகே நடைபெற்ற ஒரு பஞ்சாயத்துக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “நமது சகோதரர் குல்தீப் ஒரு கடினமான சூழலில் இருப்பதால் அவரால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.

நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் அவருக்கு எப்போதும் உண்டு. அவர் தனது சோதனைகளைக் கடந்து விரைவில் சிறைமீண்டு வருவார். நாங்கள் எங்கிருந்தாலும் எங்களின் வாழ்த்துக்கள் அவருக்கு உண்டு” என்றுள்ளார் ஆஷிஷ் சிங்.

சிறையிலிருக்கும் குல்தீப் செங்கார் பாரதீய ஜனதா கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆஷிஷ் சிங்கின் கருத்துக்கள் அவரின் சொந்தக் கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் அம்மாநில பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.