1smsung1சாம்சங் தனது புது மாடல் மொபைலுக்கு “கேலக்ஸி நோட் ஏழரை” என்று பெயர் வைத்திருக்கலாம். காரணம் வெளியிட்ட நாளிலிருந்து இந்த போன் அந்த நிறுவனத்துக்கும், வாங்கிய நாளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கும் அத்தனை தலைவலியைக் கொடுத்து வருகிறது.
கண்ணிவெடியை கையில் வைத்திருப்பதுபோல எப்போது வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறார்களாம் பலர். ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விமானங்களில் இந்த மாடல் போனை எடுத்துச்செல்ல தடையும் விதிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இதுவரை 26 மொபைல்கள் எரிந்து போனதாகவும், 55 மொபைல்கள் சேதமடைந்த தாகவும் தங்களுக்கு புகார்கள் வந்திருப்பதாக சாம்சங் நிறுவனமே தெரிவிக்கிறது. ஆனால் இதற்கு காரணம் லித்தியம் பேட்டரிகள்தான் என்றும் அந்த நிறுவனம் விளக்கம் கூறியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜோனத்தான் ஸ்ட்ரோபல் என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்துச் சிதறியிருக்கிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7. அதன் விளைவாக அவரது வலது தொடையில் மிக மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து அவர் சாம்சங் நிறுவனத்திட மிருந்து தனக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தரும்படி அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.
இதுபற்றி சாம்சங் நிறுவனத்துடன் கேட்டபோது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று மட்டும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியேல் மீஸ்டர் கோகன் தெரிவித்தார்.