சென்னை:

பெரிய பாண்டியன் உடலில் இருந்தது மற்றொரு இன்ஸ்பெக்டரான முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்று ராஜஸ்தான் காவல் துறை அறிவிள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற சம்பவத்தில் சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் அளித்த புகாரின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் செய்தரன்பாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரிய பாண்டியனுடன் சென்ற முனிசேகர் உள்ளிட்ட இதர தமிழக போலீசாரிடமும் விசாரணை நடந்தது. அப்போது பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்திருந்தது முனிசேகரின் துப்பாக்கி குண்டு என்ற தகவல் கிடைத்திருப்பதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முனிசேகர் சுட்டதில் தான் பெரியபாண்டியன் உயிர் பிரிந்துள்ளது என்று ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முனிசேகர் கொள்ளையரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என இருவரது துப்பாக்கிகளையும் ஆய்வு செய்தபின் தெரியவந்துள்ளது என்று எஸ்பி தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.