மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சுயேச்சை எம்எல்ஏ ஒருவர், தற்போது சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் முதல்வர் உத்தவ்தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டி மாநில சட்டமன்ற தேர்தலில்  பாஜக சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், ஆட்சி அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பாஜக சிவசேனா கூட்டணி உடைந்தது. இதையடுத்து,  பாஜக ஆட்சி அமைக்க முடியாத  நிலையில், சிவசேனா தரப்பில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்து வருகிறார்.
மகாராஷ்டிராவில் 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் சிலர் பாஜகவுக்கு ஆதரவாகவும், சிலர் காங்கிரஸ், சிவசேனாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த மீரா பயாந்தர் தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான  கீதா ஜெயின், பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். தறபோது அவர் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
சுயேச்சை எம்எல்ஏவின் அதிரடி முடிவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், பாஜக முன்னாள் அமைச்சர்  ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகிய நிலையில், சரத்பவார் கட்சியில் சேர்ந்துள்ளார்.  இந்த நிலையில், தற்போது சுயேச்சை எம்எல்ஏவும் கட்சி தாவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.