புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனப்படும் நீர் கனிம இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்து உள்ளது. இதை செயல்படுத்த ஜெம் லாபரட்டரி பிரைவேட் லிமிடெட்  என்று நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பாரதியஜனதா எம்பியான மல்லிகார்ஜுனையா சித்தேஸ்வரா என்பவருக்கு சொந்தமானதாகும்.

 

இத்திட்டத்தை செயல்படுத்தினால் அந்த பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும்  எனவே அதனை செயல்படுத்தக் கூடாது என்று அப்பகுதி  விவசாயிகள்,  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, நெடுவாசல் பகுதியை பார்வையிட சென்ற அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை  புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, நெடுவாசலில் செயல்படுத்த போவதாக அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

மேலும்,  போராட்டத்தை தீவிரப்படுத்த, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட மாணவர்கள், அமைப்புகளை ஒன்று திரட்டி வருகிறோம் என்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  வரும்  26-ந் தேதி உரிமை மீட்புக் குழுவை சேர்ந்தவர்கள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்