அமராவதி:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடியால், வாக்குச் சீட்டு முறையை  மீட்டெடுக்கும் நிலை ஏற்படுள்ளதாக தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தன் கட்சியினருடன் டெலிகான்ஃபரன்ஸில் உரையாற்றிய அவர், கள்ள வாக்குகள் போடுவதற்காக 2014-ல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக சைபர் குற்றங்களை கண்டறியும் நிபுணர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதற்கும் வழக்கம்போல் மறுப்பு தெரிவிக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம், இவ்விசயத்தில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி யோசிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் ஆணையரை 22 கட்சித் தலைவர்கள் விரைவில் சந்தித்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்தும், வாக்களித்ததற்கான ஒப்புகைச் சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கவுள்ளோம்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யமுடியும் என்பது, ஜனநாயத்துக்கு விடப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தல்.

120 நாடுகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில்லை. இந்தியா உட்பட 20 நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப  வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.