சென்னை

லைக்கவசம் மட்டும் அல்லாமல் மோசமான சாலைகளாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணம் அடைவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டாய தலைக்கவச சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.   நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது

அப்போது காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி சாம்சன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாகவும். இந்த காலகட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3,535  பேர் பலியாகியுள்ளதாகவும், தலைக்கவசம் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், போக்குவரத்து விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து நீதிபதிகள் அமர்வு இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்குத் தலைக்கவசம் அணியாதது மட்டுமே காரணமல்ல எனவும், சாலையின் தரமும், சாலையை முறையாகப் பராமரிக்காததும் காரணம் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன்  போக்குவரத்து விதிகளை இன்னும் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாகச் சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாகப் பராமரிப்பது குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 2020 ஜனவரி 90ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.