டெல்லி: சாமி சிலைகள் கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏடிஜிபியிடம் பொன். மாணிக்கவேல் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இருக்கிறது.


சிலைகள் கடத்தல் வழக்கை விசாரித்த பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நீட்டிப்பு செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பணி நீட்டிப்பு செல்லும் என்றும், விசாரணை அறிக்கையை ஏடிஜிபியிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.


பொன். மாணிக்கவேல் விரைவில் ஓய்வு பெறுவதால், சிலைகள் கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தகவல்களை ஒப்படைக்க வில்லை. எனவே, அவற்றை ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.


அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலைகள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஏடிஜிபியிடம் பொன். மாணிக்கவேல் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் டிசம்பர் 2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.