அப்பல்லோ 11 விண்கலம் செலுத்தப்பட்டு 50வது ஆண்டான இன்று, பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் காணமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம் செலுதப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் இன்று, உலகத்தின் பல நாடுகளில் சந்திர கிரகணம் நிகழ்வு நடக்கிறது. நிலவின் 60% பரப்பு சிகப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் என்றும், இந்த கிரகணமானது இந்திய நேரப்படி அதிகாலை 1:31க்கு தொடங்கி, காலை 4.30 மணி வரை நீடிக்கும். சுமார் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவின் சில பகுதிகளில் பூமியின் நிழல் படியும். இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆய்வு அறிக்கைகள் படி, மத்திய மற்றும் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் மேகங்கள் சூழ்ந்து இருக்கும் என்றும், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு ஐயர்லாந்து பகுதிகளில் மேகமூட்டம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் தெளிவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கிரகணத்தை, ஆப்ரிக்கா, ஆசியா, கிழக்கு தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் காண முடியும். இது தொடர்பாக ராயல் வாண்வெளி ஆய்வகத்தை சேர்ந்த அறிஞர் மார்கன் ஹாலிஸ், “சூரிய கிரகணம் போல அதிக வீரியம் கொண்டதாக சந்திர கிரகணம் இருக்காது என்பதால், பொதுமக்கள் வெறும் கண்களிலேயே கிரகணத்தை காண முடியும். இதற்காக தனி இயந்திரங்கள் ஏதும் தேவையில்லை. வானிலை சீராக இருக்கும்பட்சத்தில், தாராளமாக எல்லோரும் இந்நிகழ்வை கண்டுகளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த பகுதி சந்திர கிரகணமானது நவம்பர் 19, 2021ம் ஆண்டு தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.