டில்லி

என் டி திவாரி மகன் ரோகித் திவாரி கொலை குறித்த மேலும் விவரங்கள் வெளியாகி உள்ளன.

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த என் டி திவாரி யின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16 ஆம் தேதியன்று மரணமடைந்தார். முதலில் மாரடைப்பால் மரணம் நேர்ந்திருக்கலாம் என நினைத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு  அதனால் மூச்சு திணறல் உண்டாகி மரணம் அடைந்ததை அறிந்துக் கொண்டனர். அதை ஒட்டி விசாரணையை மேற்கொண்டனர்

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது :

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கத்கோடம் என்னும் தனது சொந்த ஊருக்கு ரோகித் திவாரி, அவர் அன்னை உஜ்வாலா மற்றும் சில உறவினர்கள் வாக்களிக்க சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் கடந்த 15 ஆம் தேதி அன்று.டில்லிக்கு மூன்று கார்களில் திரும்பிக் கொண்டு இருந்தனர். ரோகித் திவாரிக்கும் அவர் உறவுக்காரப் பெண் ஒருவருக்கும் கள்ள உறவு உள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் ஒரே காரில் மது அருந்தியபடி பயணம் செய்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோகித் திவாரியின் மனைவி அபூர்வா வீடியோ காலில் கணவரை அழைத்துள்ளார். போதையில் யார் என கவனிக்காமல் ரோகித் வீடியோ காலை ஏற்றுக் கொண்டுள்ளார். தனது கணவனை கள்ளக்காதலியுடன் குடி போதயில் பார்த்த அபூர்வா மிகவும் கோபம் கொண்டுள்ளார்.

ஏற்கனவே ரோகித் மற்றும் அந்த பெண்ணுக்கு உள்ள கள்ள உறவுக்கு அபூர்வா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அனைவரும் வீட்டுக்கு வந்த போது ரோகித் மிகவும் குடித்து இருந்ததால் அபூர்வா இது குறித்து கேட்கவில்லை. உணவு அருந்திய பிறகு ரோகித்தின் தாய் மற்றும் உறவினர்கள் அவர்கள் வீட்டுக்கு திரும்பி விட்டனர். அப்போது ரோகித் விழித்துக் கொண்டுள்ளார்.

வெகு நாட்களாகவே அபூர்வா மற்றும் ரோகித் தனித்தனி அறையில் வசித்து வருகின்றனர். ரோகித் அறைக்கு சென்ற அபூர்வா தனது கணவரிடம் சண்டை இட்டுள்ளார். இருவருக்கும் இடையில் கடுமையான வாய்த் தகராறு நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் தானும் அந்த உறவுக்காரப் பெண்ணும் ஒரே கோப்பையில் மது அருந்தியதாக ரோகித் கூறி உள்ளார்.

இதனால் கோபமடைந்த அபூர்வா அவரை ஆத்திரத்தில் கழுத்தை நெறித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால் ரோகித் அவரை எதிர்க்க முடியவில்லை. அவர் மூக்கில் ரத்தம் வடிய விழுந்து விட்டார். அபூர்வா ஒன்றும் செய்யத் தோன்றாமல் அதே அறையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்துள்ளார். அதன் பிறகு தனது அறைக்கு சென்றுள்ளார்.

காலையில் அவர்களுடைய பணியாளர் பார்த்த போது ரோகித் உறங்குவதாக அவர் நினைத்துக் கொண்டார். ரோகித் எப்போதும் மெதுவாக எழுவதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதற்கிடையில் ரோகித் திவாரியின் தாய் தொலைபேசியில் அழைத்த போது அபூர்வா அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு மாலை சுமார் 3.30 மணிக்கு மேல் பணியாளர் ரோகித்தை எழுப்ப முயன்றுள்ளார்.

ரோகித் வாயிலும் மூக்கிலும் இரத்தம் உள்ளதைக் கண்டு அவர் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருடைய உடல் பரிசோதனை மூலம் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவருடைய அறையை பரிசோதனை செய்தனர்,

கொலை நடந்த போது அதே வீட்டில் இருந்த அபூர்வா தீவிரமாக விசாரிக்கப்பட்டார். விசாரணையில் அபூர்வா நடந்தவைகளை ஒப்புக் கொண்டு மேற்கூறிய விவரங்களை தெரிவித்துள்ளார். தற்போது அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.   இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அபூர்வாவின் வீடியோ அழைப்பு ஆகி உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.