டில்லி:
பிரபல நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான்  மீண்டும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ஒப்பந்த முறை எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பாளராக இருப்பது பாக்ஸ்கான் நிறுவனம்.
download (1)
ஏற்கனவே, பல முன்னணி செல்போன் பிராண்டுகளுக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகின்றது இந்த நிறுவனம்.  ஐபோன், ஐபேடு மற்றும் அமேசானின் கிண்டில் பேடுகளை தயாரித்து கொடுப்பதற்காக இந்தியாவில் ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 இடங்களில் தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும், 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
மேலும், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் டேட்டா சென்டர்களையும் துவங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஆப்பிள், சிஸ்கோ, மைக்ரோசாப்ட், எச்.பி, டெல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இருந்து மொபைல் ஹேண்ட்செட்டுகள், டேப்லட்டுகள், டிவி, பேட்டரி, செட்டாப் பாக்ஸ்கள் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வழங்க ஆர்டர்கள் வந்திருக்கின்றன.