புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘மேட் இன் இந்தியா’ ஐஃபோன்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வது என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா – சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வணிகப் போரில் ஈடுபட்டு வருவதால், இதுவரை உற்பத்தி செயல்பாட்டிற்கு சீனாவையே பெரிதும் நம்பியிருந்த நிறுவனங்கள், வேறு இடங்களை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தனது பங்குதாரர்களின் மூலமாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தயாரிப்புகளின் மூலம் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கான உலகளாவிய தேவை ஈடுசெய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.