சென்னை:

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்  படிப்புகளுக்கு  ஜூன் 6ந்தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று  மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் கடந்த 5ந்தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஜூன் 6ந்தேதி முதல்  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள்  நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே விநியோகிக்கப்படும் என்றும்,  www.tn.health.org, www.tnmedicalselection.org  ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவப் படிப்புக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரம் இடங்களும், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 207 இடங்களும் உள்ளன. அரசு பல் மருத்துவ கல்லூரியில் வழக்கம் போல் 100 இடங்கள் உள்ளது.18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் ஆயிரத்து 45 இடங்கள் உள்ளன.

தமிழகத்தில்  22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அத்துடன்  இந்த ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களுக்கான ஒதுக்கீடு நீட் தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது.  ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.