சென்னை: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு விளம்பரம் வெளியிட்டுஉள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎல் போன்ற சிவில் தேர்வுகளை மத்திய தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி நடத்தி வருகிறத. அதன்படி,  முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில்,  ஆட்சிப்பணித் தேர்வின் முதல் கட்டமான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சிக்கான விண்ணப்பம் நாளை தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு தேர்வாணையப் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக பயிற்சியில்  சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வமான இணையதளமான  https://www.civilservicecoaching.com சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதனப்டி,  ஆன்லைன் மூலம் விண்ணப்பம் நாளை (11/12/2020) காலை 10 மணி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.28 மாலை 6 மணியுடன் முடிகிறது.

 நுழைவுத்தேர்வு:

பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுத் தகுதியுடையவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 24/01/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்கிறது. நுழைவுத்தேர்வு ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் இருக்கும் (Objective type). தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு தேர்வாணையப் பயிற்சி மையத்தில் 6 மாத காலம் இலவசத் தங்குமிடம், உணவுடன் பயிற்சி அளிக்கப்படும்.

100 கேள்விகள் இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சிமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம், பொது அறிவியல், சமகால நிகழ்வுகள், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சூழலியல் மற்றும் பல்லுயிர் குறித்த கேள்விகள் இருக்கும்.

பயிற்சிக் காலத்தில் முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஆளுமைகள் மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சியை அளிப்பார்கள்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பகுதிநேரப் பயிற்சியும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும், வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.

 பயிற்சியில் இணையத் தேவையான கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது அடுத்த ஆண்டு ஆக.1-ம் தேதி அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கவேண்டும். இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம் முழுவதும் முற்பட்ட வகுப்பினருக்கு ஆயிரம் ரூபாய் மற்ற பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் உணவும் இலவசமாக வழங்கப்படும். பகுதிநேரப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்படாது. ஆனால், பயிற்சி நேரத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்கள் காப்புத் தொகையாக ரூ.3000/- செலுத்த வேண்டும்.

விடுதியில் தங்கிப் பயிற்சி பெற 225 பேருக்கு அட்மிஷன் போடப்படும். அவர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு இலவசம். இதில் வகுப்புவாரியாகத் தாழ்த்தப்பட்டோர் 110 இடங்கள் (ஆதிதிராவிடர் 92, அருந்ததியர் 18), பழங்குடியினர் 3 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40, பிற்படுத்தப்பட்டோர் 54, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் 7, முற்பட்ட வகுப்பினர் 4 என மொத்தம் 225 பேர்.

பகுதி நேர வகுப்பில் சேருவோருக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 100. இதில் தாழ்த்தப்பட்டோர் 49 (ஆதிதிராவிடர் 41, அருந்ததியர் 8), பழங்குடியினர் 1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18, பிற்படுத்தப்பட்டோர் 24, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் 3 , மாற்றுத்திறனாளிகள் 3, முற்பட்ட வகுப்பினர் 2.

சிவில் தேர்வு எழுத ஆர்வம் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், வெளிமாவட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அரசு தேர்வாணையப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.