சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தல் முடிவும் அறிவிக்கப்படுமால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தை  நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை பதிவுத்துறை நியமனம் செய்து உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தது.  இது தொடர்பான வழக்கில் தீர்ப்பை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடிகர் சங்க உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், நிர்வாகிகளுக்கு ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை நிலுவையில் உள்ள நிலையில்,  தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதாவை பதிவுத்துறை நியமித்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்காமல் உள்ள நிலையில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளது நடிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.