சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஏப்ரல் 25ந்தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 25ந்தேதி அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தற்போது பொதுமுடக்கம் அறிவிப்பின்படி, முழு அடைப்பு உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கறிக்கடைகளை மூட உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 25.04.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக ஏப்ரல் 25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து இறைச்சிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவினைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

 இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.