சென்னை: ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், சென்னை அணியின் வீரர்கள் முன்கூட்டியே அமீரக நாட்டிற்கு சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் 13வது சீசன் போட்டிகள் அமீரக நாட்டில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், தங்களின் உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, ஒரு மாதம் முன்னதாகவே, தங்கள் அணிகளை அமீரகம் அனுப்புவதற்கு அணி உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 9ம் தேதிவாக்கில், சென்னை அணி வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அங்கிருந்து, தனி விமானத்தில் முதல் அணியாக அவர்கள் அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அணி அதிக மூத்த வீரர்களைக் கொண்ட அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.