சென்னை:

நீங்கள்ளாம் ஆம்பிளையா? என்று சசிகலா முதல்வர் பதவி ஏற்க முற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த  ஓபிஸ்சிடம் கேட்டதாக குரூமூர்த்தி கூறி உள்ளார்.

துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் திருச்சியில்  நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது,  மகாராஷ்டிரா அரசியல் குறித்து பேசியவர்,  அங்கு இப்படியொரு நிலை உருவாக, சரத்பவார்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

அதற்காக பாஜக செய்தது சரி எனக்கூறவில்லை என்று தெரிவித்தவர்,  பாஜக தர்மசங்கடத்தில் உள்ளது. அங்கு சிவசேனாவை, பாஜக மட்டுமே  அடக்கி  வழி நடத்த முடியும்.  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாக கருதி பாஜக இப்படியொரு செயலை செய்திருந்தால் வரவேற்போம். அதற்கு மாறாக எதிர் தரப்பின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தால் அது தவறு…அதை ஏற்க மாட்டோம் என்று கூறினார்.

தொடர்ந்து தமிழக அரசியல் குறித்து பேசியவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட இக்கட்டான அந்த சமயத்தில் தமிழகத் துக்கு திசை காட்டியது துக்ளக் என்றும்,  சசிகலாவை முதல்வராக்க, சென்னை யுனிவர்சிட்டி நூற்றாண்டு மண்டபத்தில்  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது,  அப்போதைய முதல்வர் ஓபிஎஸ், தன்னை வந்து சந்தித்து புலம்பியதாகவும், என்ன செய்வ தென்று அலோசனை கேட்டதாகவும், அப்போது நான், அவரிடம் நீங்கள்ளலாம் ஆம்பிளையா? என்று கேள்வி எழுப்பியதுடன், சமாதியில் போய் உட்கார் என்று அறிவுறுத்னேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகே,  தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது, காட்சிகள் மாறின. இரண்டாக பிரிந்து கிடந்த அதிமுகவை  இணைக்க முயற்சி எடுத்தேன், என்றும், அவர்களை இணைத்ததில் எனக்கும்  பங்குண்டு என்று கூறினார்.

தொடர்ந்து தமிழகஅரசை கடுமையாக விமர்சித்தவர், தற்போது  முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும்   இந்த ஆட்சி பாவமான ஆட்சி, தவறான ஆட்சி என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை… என்றவர், இங்கு பேசியவர்கள் பாஜகவிடம் பேசி, அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்… ஆனால், இதுபோன்ற விஷப்பரிட்சையில் இறங்க நான் தயாராக இல்லை என்று கூறினார்.

அரசியல் சட்டப்படி இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால், அடுத்த 6 மாதத்துக்குள் தமிழகத்தை மாற்றி விட முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர், அதுபோல் நடைபெறும் வாய்ப்பு இல்லை… என்றும், தமிழ  மக்கள் மூலம்தான் தமிழகத்துக்கு மாற்றம் ஏற்படுத்த முடியும், அதற்கு ரஜினிகாந்த் போன்ற பிரபலமானவர்கள் வந்தால்தான் முடியும் என்று தெரிவித்தார்.

பாஜகாவால் தமிழகத்தில்  நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்று கூறியவர்,  ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கேள்விக்குறி என்றும் தெரிவித்தார்.