ரியோடிஜெனிரோ: அடுத்த 2022ம் ஆண்டில், கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் உருகுவே அணிகள் வென்றுள்ளன.
ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தென்அமெரிக்க கண்ட அளவில் இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஈக்வடார் நாட்டிற்கு எதிரான போட்டியில், அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா அணி வென்றது.
சிலி அணிக்கு எதிராக ஆடிய உருகுவே, 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. அதேசமயம், பராகுவே – பெரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
இது, தகுதிபெறுவதற்கான முதல் சுற்று ஆட்டங்கள் மட்டுமே. 2022 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிபெறும் போட்டிகள் அதே ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.