முசாஃபர்நகர், உத்திரப் பிரதேசம்

திருமண வீட்டில் ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் கொள்ளையடிக்கும் போது மணமகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகில் உள்ளது மாதோர் என்னும் கிராமம்.  நேற்று இரவு இந்த கிராமத்தில் ஒரு மண விழா நடைபெற்றது.   திருமணம் முடிந்து மணமக்களும் அவர்களது உறவினர்களும் மணமகன் வீட்டுக்கு திரும்ப செல்ல இருந்தனர்.   அப்போது இரண்டு வாகனங்களில் ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் ஆறு பேர் வந்துள்ளனர்.

அவர்கள்  இந்த திருமண கோஷ்டியிடம் இருந்த நகைகளையும்  பணத்தையும் கொள்ளையிட முயன்றுள்ளனர்,  மணமக்களும் மற்றவர்களும் அதை எதிர்க்கவே கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டுள்ளனர்.   இந்த துப்பாக்கி சூட்டில் மணமகள் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.  மணமகனும் மற்றும் 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த நகைகள், பணம் ஆகியவைகளுடன் ஒரு காரையும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.  விவரம் அறிந்த காவல்துறையினர் அங்கு வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.   காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    கொள்ளையர்களை தேடிக் கண்டுபிடிக்கும்  முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.