ஓசூர்:
பிரதம மந்திரியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பெங்களூரை சேர்ந்த பிரபல நிறுவனமான ஜிஎம்ஆர் குழுமம் ஓசூர் பகுதியில் விமானம்- ராணுவ தளவாட மையத்தை அமைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து ஜிஎம்ஆர் நிறுவனம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பெக்களூரை தலைமையிடமாக கொண்டுள்ள ஜிஎம்ஆர் என்ற நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்கள், ஆற்றல்; போக்குவரத்து; நகர உள்கட்டமைப்பு; ஃபவுண்டேஷன் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், விமானம் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மையத்தை அமைக்க இருப்பதாக கூறி உள்ளது.
இதுகுறித்து ஜிஎம்ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
மத்திய அரசு, ஏற்கனவே ஓசூர் – சென்னை இடையே, ராணுவ தொழில் உற்பத்தி பாதை அமைக்கப்படும் என அறிவித்தபடி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை அமைக்கப்படுகிறது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்துடன் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து ஓசூரில், விமான சாதனங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் மையத்தை, அமைக்க உள்ளோம். இங்கு, உடனடியாக தொழில் துவங்க வசதியாக, 600 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், செய்து தரப்படும். இந்திய பாதுகாப்பு துறைக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஏற்றதாக, இந்த மையம் விளங்கும். இதன் மூலம், இப்பகுதி குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.