சிட்னி: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், தான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்.

சென்னையில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் ஒருநாள் & டி-20 கேப்டனான ஆரோன் பின்ச், எந்த அணியாலும் சீண்டப்படாதது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண வீரர்களெல்லாம் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள். ஆரோன் பின்ச்சுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த தொடரில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஆரோன் பின்ச், 268 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆரோனின் மோசமான ஃபார்ம் காரணமாகவே அவரை ஆர்சிபி அணி நிர்வாகம் விடுவித்தது.

இந்நிலையில், ஆரோன் பின்ச் கூறியுள்ளதாவது, “2021ம் ஆண்டு ஐபிஎல் டி-20 தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். நான் மீண்டும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் வருவேன்.

மிகச்சிறந்த போட்டியான ஐபிஎல் தொடரில் நான் விளையாட முடியாதது, நான் அதில் ஒருபகுதியாக இடம்பெறாதது எதிர்பார்த்ததுதான். இதை நேர்மையாகச் சொல்கிறேன். என்னுடைய பேட்டிங்கில் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

கால்களை முன்னே நகர்த்தி ஆடுவதில் சிரமம் இருக்கிறது. அதைச் சரிசெய்து வருகிறேன். இதுதொடர்பாக நான் ஆன்ட்ரூ டொனால்டுடன் கலந்து பேசி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன். இயல்பான ஆட்டத்துக்கு வரமுடியாமல் தவிக்கும்போதெல்லாம் மெக்டானால்டிடம்தான் அறிவுரை கேட்பேன். அவரிடம் பயிற்சி பெறுவது என்பது அற்புதமான உணர்வு” என்றுள்ளார் பின்ச்.