சென்னை:
மிழக அரசு அறிவித்ததை போல, தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மாணவர்களை திரட்டி தேர்வு எழுதுவது கடினமானது என்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இது அரியர் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இருப்பினும், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்னும் அரசின் முடிவிற்கு ஏஐசிடிஇ எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் சொந்த கருத்தை ஏஐசிடிஇவின் கருத்தாக திணிக்கப் பார்ப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். மேலும், அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது பற்றி ஏஐசிடிஇவிடம் இருந்து எந்த கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பினால், அரியர் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.