சென்னை: அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதா என, சென்னை  அண்ணா பல்கலைக்கழக  முன்னாள் துணைவேந்தர்  பாலகுருசாமி, தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, நாடுமுழுவதும் கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளதால், பள்ளிகள், கல்லூரிகளின் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

பல மாநிலஅரசுகள் கல்லூரியின் இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், யுஜிசி வழிகாட்டுதல் மற்றும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில், கல்லூரித் தேர்வில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளை யும் ரத்துசெய்தும், அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், தேர்வுக்கு பணம் கட்டியிருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழகஅரசு அதிரடியாக அறிவித்தது. இது மாணவ சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதுதொடர்பாக பல மாணவர்கள் சமூக வலைதளங்களில், முதல்வர் எடப்பாடி புகழ்ந்து கருத்து பதிவிட்டும், வீடியோ வெளியிட்டும் அலப்பறை செய்து வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக, திமுக தலைவர் ஸ்டாலினோ, பணம் கட்டாத அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும், அவர்கள் பணம் கட்ட அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அரியர் மாணவர்களை எப்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியும், இதனால் கல்வி நிறுவனங்களின் தரம் கேள்விக்குரியதாகிவிடும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகஅரசின் அறிவிப்பு, உண்மையிலேயே மிகவும் விகாரமானது: மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் நிபுணர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களின் நிலுவைத் தேர்வுகளை (இறுதி ஆண்டு தவிர) ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் விருப்பம் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில் தேர்வு மற்றும் தேர்ச்சி முடிவுகளை நடத்துவதில்லை, பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகள்  மற்றும் சிண்டிகேட்டுகள், செனட்டுகள் மற்றும் கல்வி கவுன்சில்கள் உள்பட எல்லா அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றன. அவைகள் மட்டுமே  தேர்வுகள் மற்றும் தேர்ச்சி குறித்து மட்டுமே தீர்மானிக்க முடியும். இதில் தலையிட  அரசாங் கங்களுக்கு உரிமை இல்லை. அரசாங்கம்,  பல்கலைக்கழகங்களின் கல்வி விஷயங்களில் ஒருதலைப்பட்சமாக தலயிட்டு  தேர்வுகளை ரத்து செய்துள்ளன.

அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக,  துணைவேந்தர்கள் விழித்தெழுந்து அவர்களின் தன்னாட்சி அந்தஸ்தைப் பெற வேண்டும் மற்றும் இதுபோன்ற எந்தவொரு நெறிமுறையற்ற நகர்வுகளையும் எதிர்க்க வேண்டும், அதற்கான நேரம் இது.

எடுத்துக்காட்டாக கூற வேண்டுமானால், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது ஒரு விஷயம் மற்றும் தோல்வியுற்ற மாணவர்களின் நிலுவைத் தேர்வுகளை ரத்துசெய்து தேர்ச்சி பெறுவது முற்றிலும் வேறுபட்ட விஷயம். இந்த இரண்டையும் மக்கள் குழப்பக்கூடாது.

பல மாணவர்கள் 10க்கும் மேற்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்டுள்ளனர் மற்றும் பெரும் பாலான பாடங்களில் 20% க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

பரீட்சைக்கட்டணத்தை செலுத்தியதால் இந்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை ஒரு பல்கலைக் கழகம் எவ்வாறு அறிவிக்க முடியும்? இது முற்றிலும் அபத்தமானது. இத்தகைய நடவடிக்கை பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அதன் நம்பகத்தன்மையையும் மோசமாக பாதிக்கும்.

அண்ணா பல்கலைக்கழகம் போன்ற ஒரு உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் இதுபோன்ற ஒரு மோசமான முடிவை செயல்படுத்துவதைப் பார்ப்பது கற்பனைக்கு எட்டாதது. பல்கலைக்கழக கல்வி அமைப்புகள் பொருத்தமற்றதாக ஆக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.