டில்லி

ம்மை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீருக்கு டில்லி முதல்வ்ர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டபூர்வமாக நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி கடும் புகார் அளித்தார். ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிஷி டில்லியில் சில பகுதிகளில் கவுதம் கம்பீர் சார்பாக தம்மை பற்றி செய்தி தாள்களுடன் துண்டு பிரசுரம் அளிக்க்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த பிரசுரத்தில் தம்மையும் டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவையும் குறித்து தவறாக தெரிவிக்கப் பட்டுள்ளதாக கூறி கண்ணீர் சிந்தினார்.

இது கவுதம் கம்பீருக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அதை நிரூபித்தால் தாம் தேர்தலில் இருந்து விலகி தூக்கு போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன் இவை அனைத்தும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்யும் சதி என தெரிவித்து கெஜ்ரிவாலை மட்டமானவர் எனவும் அவரைப் போல ஒரு முதல்வர் உள்ளதற்கு தாம் அவமானப்படுவதாகவும் தெரிவித்தார்.

கவுதம் கம்பீரின் இந்த கருத்து ஆம் ஆத்மி வட்டாரத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கவுதம் கம்பீருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது கவுதம் கம்பீர் தாம் முதல்வராக இருப்பதற்கு அவமானப்படுவதாக தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவ்ருமான அரவிந்த் கெஜ்ரிவால் சட்டபூர்வமாக நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.