மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு: நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்..

மே.வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு பூஜா ஷா என்ற நிறைமாத கர்ப்பிணியை அவரது தாயார் தீதா கோஸ்வாமி என்பவர் நேற்று பிரசவத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் பூஜாவை மருத்துவமனையில் அனுமதிக்க அங்குள்ள டாக்டர்கள் மறுத்துள்ளனர்.

மகள் பிரசவ வலியால் துடித்த நிலையில், அவரது தாயார் தீதா, காலில் விழாத குறையாக டாக்டர்களிடம் கெஞ்சியுள்ளார்.

டாக்டர்கள், இளகவில்லை.

இதனால் மகளை அழைத்துக் கொண்டு தீதா அங்குள்ள கோட்டாட்சி அலுவலகம் அருகே வந்தபோது, நடு ரோட்டில் பூஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்த தகவலை துர்காபூர் துணை ஆட்சியர் அனீர்பன் கோலே கவனத்துக்கு ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

துணை ஆட்சியர் உத்தரவையடுத்து, பூஜாவும் அவரது பச்சைக்குழந்தையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் துணை ஆட்சியர் அனீர்பன் தெரிவித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனையில் எதற்காக டாக்டர்கள் அனுமதிக்க மறுத்தனர் என்பது தெரியவில்லை.

-பா.பாரதி.