ண்டிகர்

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பெற முடியாத சூழலில் உள்ளதால் மாநில பாஜக தலைவர் சுரேஷ் பர்லா ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி அரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.  முக்கிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அனைத்து 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

இறுதியாக இந்த தேர்தலில் 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் போட்டியிட்டன. இதைத் தவிர ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இந்தியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

இன்று அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. அத்துடன் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.

தற்போதைய முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியிலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜ் அம்பாலா கண்டோண்மென்ட் தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதைத் தவிர மாநில அமைச்சர்கள் இருவர் தங்கள் தொகுதியில் பின் தங்கியுள்ளனர். அரியானா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழலில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

அரியானா மாநில முதல்வர் பதவியை  துஷ்யந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற முடியாத சூழல் நிலவுவதால் மாநில தலைவர் சுபாஷ் பரலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.