அமராவதி
மத்திய அரசு ஆந்திராவுக்கு அளிக்க வேண்டிய ரூ. 8000 கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் ஆந்திர அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, தெலுங்கான என இரு மாநிலம் அமைக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதியை தலைநகராக ஒதுக்கப்பட்டது. இந்த நகரின் மேம்படுத்த ஆந்திர அரசுக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. அத்துடன் ஆந்திர அரசு மேற்கொண்டு வரும் போலாவரம் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட பல நலத் திட்டங்களுக்கும் நிதி தேவைப்படுகிறது,
அத்துடன் அரசின் மென்பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது உள்ள நிதியைக் கொண்டு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை, அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம், மற்றும் ஓய்வூதியம் ஆகியவையும் மென்பொருள் சேதத்தினால் வழங்கப் படாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற மாத ஊதியம் பலருக்கு இந்த மாதம் 7 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மென் பொருளில் உள்ள கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளன.
ஆந்திர அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர், “மத்திய அரசிடம் இருந்து ரு. 8000 கோடி வர வேண்டி உள்ளது. பல்வேறு காரணங்களைக் கூறி மத்திய அரசு இந்தத் தொகையை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் மென்பொருள் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யவும் நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசு உடனடியாக ரூ.3000 கோடியை தர வேண்டும். அதையும் இதுவரை தராமல் உள்ளது. ஆந்திர அரசின் இந்த நிதி நெருக்கடிக்கு மத்திய அரசுதான் காரணம்” எனக் கூறி உள்ளார்.