துபாய்: கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய அணியில் அம்பாதி ராயுடுவை சேர்க்காமல் போனதே, அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்றுள்ளார் சென்னை அணியின் ஷேன் வாட்சன்.

மும்பைக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில், மும்பை அணியின் பும்ராவை, ராயுடு சமாளித்த விதம் குறித்து சிலாகித்துள்ளார் வாட்சன்.

“ராயுடுவின் பேட்டிங் உண்மையிலேயே பிரமாதமானதாக இருந்தது. அவர் உண்மையிலேயே ஒரு நம்பமுடியாத பேட்ஸ்மேன். அவரை அணியில் சேர்க்காமல் போனதால்தான், இந்திய அணி 2019 உலகக்கோப்பையில் தோல்வியடைந்தது என்று நினைக்கிறேன்.

பும்ரா போன்றவர்களை அவர் எதிர்கொண்ட விதம், உண்மையிலேயே அற்புதமானது. மைதானத்தின் அனைத்துப் புறங்களிலும் அவர் ரன்களை அடித்தார். அவரின் பழைய அணியான மும்பைக்கு, தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார் ராயுடு” என்றுள்ளார் வாட்சன்.