சென்னை

தமிழகத்தில் 20,21 மற்றும் 22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை அளித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், கடலூர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தர்மபுரி, ஈரோடு,தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதலே பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.   குறிப்பாக மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது . தமிழகத்தில் 20,21,22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் , திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில் சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் மிதமான மழை மட்டுமே  பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகர்கோவிலில் 8 செ.மீ., பெருஞ்சாணி அணையில் 7 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.