சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு!!
சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று கோயில் நடை திறக்கப்படுகிறது.
Women
ஏற்கெனவே கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்ட போது, பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 3,731 பேர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. எனவே, இம்முறையும் சபரிமலைக்கு பெண்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க, சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டம் நடைபெறலாம் என்பதால் பாதுகாப்பு கருதி, கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே கோயிலுக்குச் செல்ல விரும்பும் பெண்கள், தங்களை அணுகினால் உச்சநீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க தயாராக இருப்பதாக, போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.