ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் விடுத்த கெடு முடிந்தும் அவர் ராஜினாமா செய்யாததால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்,

.

பிரதமர் இம்ரான்கான் பதவி ஏற்றதில் இருந்தே அவருக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.    அவர் தேர்தலில் மோசடி செய்து வென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.  அத்துடன் தற்போது பாகிஸ்தான் நிதிநிலை கடுமையாகச் சரிந்துள்ளதற்கும், பல இயக்கத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கும் இம்ரான்கான் பொறுப்பு என மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையொட்டி மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் தலைமையில் விடுதலை பேரணி என்னும் ஒரு பேரணி நடந்தது.  அதில் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் ராஜினாமா செய்யக் கெடு விதிக்கப்பட்டது.  இம்ரான்கான் ராஜினாமா செய்யாவிடில் அவருடைய இல்லத்தில் புகுந்து அவர் கைது செய்யப்படுவார் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இம்ரான்கான் பதவி விலக மறுத்துள்ளார்.  இந்தப் போராட்டங்கள் லஞ்சக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க நடத்தப் பேரம்  பேச நடத்தப்படும் நாடகம் என தெரிவித்துள்ளார்.   இம்ரான்கான் இல்லத்தின் அருகே கடுமையான காவல இடப்பட்டுள்ளது.   வீட்டுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டி உள்ளார்.  இம்ரான்கானுக்கு விடுத்துள்ள கெடு முடிந்த  போதும் அவர் ராஜினாமா செய்யாதது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.   அப்போது இம்ரான்கான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரகுமானின் இந்த முடிவுக்குப் பாகிஸ்தானின் எதிர் கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி, பக்துன்குவா மிலி அவாமி கட்சி, குவாமி வதன் கட்சி, தேசியக் கடி மற்றும் அவாமி தேசிய கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளது.   இந்த கூட்டம் மிகவும் குறுகிய கால கட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் உடனடியாக கலந்துக் கொள்ள முடியவில்லை என பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் ஷெபாஸ் ஷெரிஃப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.