பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது?

தேனியைச் சேர்ந்த 36 வயதான விஜயன் சாமுவேல் மதுரை தனக்கங்குளம் பகுதியில் இரண்டு வருடங்களாக பிரேயர் ஹால் ஒன்றை நடத்தி வருகிறார்.  இந்த கொரோனா ஊரடங்கினால் வாராந்திர கூட்டங்கள் நடைபெறாத காரணத்தினால், காணிக்கை பணம் ஏதும் வசூலாகவில்லை.  இதனால் மாத வாடகை ரூ. 10,000/- தர முடியாமல் அவதிப்பட்ட இவருக்குச் சாலையோரமாக நின்றிருந்த இரு சக்கர வாகனங்கள் கண்களில் பட்டுள்ளது.

இவற்றைத் திருடி அதிலுள்ள ஜெராக்ஸ் பேப்பர்களை வைத்து, வண்டிகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.  மேலும் இது போன்ற மூன்று திருட்டு வண்டிகளைக் கம்பத்திலுள்ள தனது குடும்பத்தினருக்கு அளித்ததுடன், இன்னும் இரண்டு வண்டிகளைத் தனது சர்ச்க்கு சர்வீஸ்க்கு வரும் இரண்டு பேருக்கும் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து இந்த திருட்டை எஸ்எஸ் காலனி, சுப்ரமணியபுரம் ஆகிய பகுதிகளில் செய்து வந்த இவர் சமீபத்தில் பைபாஸ் ரோட்டிலுள்ள ஒரு மெக்கானிக்கிடம் திருடிய வண்டி ஒன்றை ரிப்பேர்க்கு விட்டுள்ளார்.  இங்கு தான் விதி விளையாடியது. அந்த வண்டியைப் பார்த்ததும் மெக்கானிக்கு தனது வாடிக்கையாளர் ஒருவரின் காணாமல் போன வண்டி இது என்று தெரிந்துள்ளது.

உடனே அவர் தனது வாடிக்கையாளரை அழைத்து வண்டியைக் காட்ட, அவரும் அதனை உறுதி செய்தவுடன் இருவரும் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் பின்னர் போலீசார் வசமாகப் பிடிக்க வலை விரித்துக் காத்திருந்தனர் . சனிக்கிழமையன்று வண்டியைத் திரும்ப எடுக்க வந்த பாதிரியார் விஜயன் சாமுவேல் போலீஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

– லெட்சுமி பிரியா