சென்னை: தமழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமிய கட்சி ஒன்றின் தலைவராக உள்ள  அசாதுதின் ஓவைசியின் கட்சியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த பட்சம் 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்தவரான அசாதுதின் ஓவைசி,  அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் என்ற கட்சியின்  தலைவராக இருந்து வருகிறார். இஸ்லாமிய  இளைஞர்களிடையே நன்மதிப்பை பெற்றள்ள ஓவைசி, தற்போதைய பாராளுமன்ற எம்.பி.யாகவும் உள்ளார்.  நாடு முழுவதும் உள்ள  முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதத்தின் பக்கம் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.  இதனால், நாடுமுழுவதும்  இஸ்லாமியர்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ள ஓவைசி, பல மாநில தேர்தல்களில் களமிறங்கி, தனது ஆதரவை நிரூபித்து வருகிறார். சமீபத்தில்,  நடந்து முடிந்த பிகார் சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து  14 தொகுதிகளில் போட்டியிட்டு 5ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில்,  தமிழக சட்டமன்ற தேர்தலிலும ஓவைசியின் கட்சி போட்டியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் கட்சிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அதிமுக, திமுக கட்சிகளை சார்ந்தே தேர்தலை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், ஓவைசியின் கட்சியும் தேர்தலில் இறங்கினால், இஸ்லாமிய சமூகத்தினர் வாக்குகள் பிரியும் நிலை ஏற்படும்.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓவைசி களமிறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக  தமிழகத்தின்  வெற்றி வாய்ப்புகள் உள்ள சுமார் 50 தொகுதிகளில் ஓவைசி கட்சியின்  ஆய்வு நடத்தியிருப்பதாகவும், குறைந்த பட்சம் 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக வரும் டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநாட்டில் பேசி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் திராவிட கட்சிகளின் வெற்றித்தோல்விக்கு இஸ்லாமிய வாக்குகள் பெரிதும் காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும்,  திராவிட கட்சிகள் முஸ்லிம்களை வாக்கு வங்கியாகத் தான் கருதுகின்றன. அவர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் அசாதுன் கட்சி போட்டியிட தீர்மானித்து இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் தமிழக அரசியலில் மேலும் சூட்டை கிளப்பி உள்ளது.