ஆஷ்ரம் பள்ளி செயல்படும் இடத்தின் உரிமையாளர் தவறான தகவல்களை பரப்புவதாக அப்பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான  ஆஷ்ரமம் பள்ளி, சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இதை ரஜினியின் மனைவி லதா நிர்வகித்து வருகிறார்.  சென்னையில் பெரும் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று என்று பெயர் பெற்றிருக்கிறது.

அதே நேரம், இங்கு பணிபுரியும் ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து பத்திரிகை டாட் காம் இதழிலும் செய்தி வெளியிட்டுள்ளோம்.

இந்த நிலையில், பள்ளி செயல்படும் இடத்தின் உரிமையாளருக்கு வாடகை பாக்கி வைத்ததால் அவர் பள்ளி கதவுகளை இழுத்துப் பூட்டிவிட்டதாக இன்று தகவல் பரவியது.

இந்த நிலையில் ரஜினி மற்றும் லதா ரஜினி சார்பில்  அவர்களது வழக்கறிஞர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், , பள்ளி நிர்வாகத்தின் மீது நில உரிமையாளர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மாதா  மாதம் தவறாமல் வாடகை தரப்பட்டு வருகிறது.  தவறான தகவல்களைப் பரப்பும் நில உரிமையாளர்  மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்காது, மாற்று இடத்தில் பள்ளி  செயல்படும்” என்றார்.