திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனிஉத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேரானது ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற பெருமைக்கு சொந்தமானது.

திருவாரூர் தியாகராஜர் கோயில் சப்தவிடங்க தலங்களில் தலைமையானது. நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில்,   தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலம்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான, பெரிய கொடியேற்றம் நேற்று (புதன்கிழமை ) காலை நடைபெற்றது. திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற புகழ்பெற்றது.

திருவாரூக்கு பெருமைசேர்க்கும் ஆழித்தேர் திருவிழா,  தேரோட்டம் மார்ச் மாதம் 25ந்தேதி நடைபெற உள்ளது. ஆழித்தேரில் ஆரூரர் அமர்ந்து உலா வரும் திருக்காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆழித்தேரோட்டத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திருவாரூரில் கூடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, கடந்த பிப்ரவரி  28-ம் தேதி இரவுகுண்டையூரிலிருந்து பூதகணங்கள் நெல் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மருதப்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலுக்கு சண்டிகேஸ்வரர் சென்று, அங்கிருந்து மண் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெரிய கொடியேற்றம் நேற்று காலைநடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  நேற்று காலை சுவாமி வீதி உலாவுக்குப்பிறகு தியாகராஜர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் முடிந்ததும், தியாகராஜ சுவாமியிடம்கோயில் உள்துறை மணியமும், ஆதிசண்டிகேஸ்வரரிடம் ஓதுவாரும் லக்னப் பத்திரிகையை வாசித்தனர்.

அதில், தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.