கவுகாத்தி: அசாமில் அனைத்து மதரஸாக்களையும் அடுத்தாண்டு  ஏப்ரல் 1ம் தேதி முதல் பொது பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

அம்மாநில சட்ட சபையின் 3 நாள் குளிர்கால கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில், கல்வியமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மா அனைத்து மதரஸாக்களையும் பொது பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அசாம் மதரஸா கல்வி சட்டம்  மற்றும் மதரஸா கல்வி நிலைய பணியாளர்களின் சேவைகள் மற்றும் மறுநிர்ணய சட்டம் ஆகிய 2 சட்டங்களையும் நீக்க தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா வழி வகை செய்கிறது.

இது குறித்து அமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மா கூறியதாவது: அனைத்து மதரஸாக்களும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும். அதே நேரத்தில் மதரஸாக்களின் தரம், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியம், சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவித்தார்.