வுகாத்தி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  குறிப்பாக அசாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது.

அசாம் மாணவர் சங்கம் நடத்தும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து  வருகின்றனர்.   அவ்வகையில் அரசு ஊழியர்கள் சங்கம் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அசாம் அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான அசாம் மாணவர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.  அதையொட்டி வரும் 18 முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.